தலம் : மறைக்காடு
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : மறைக்காட்டு மணாளர்;
அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்.
திருச்சிற்றம்பலம்
ஓத மால்கடல்
பாவி உலகெலாம்
மாத ரார்வலங்
கொண்மறைக் காடரைக்
காதல் செய்து
கருதப் படுமவர்
பாத மேத்தப்
பறையுநம் பாவமே. 1
பூக்குந் தாழை
புறணி அருகெலாம்
ஆக்கந் தானுடை
மாமறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி
யீர்அடி யார்தமை
நோக்கிக் காண்பது
நும்பணி செய்யிலே. 2
புன்னை ஞாழல்
புறணி அருகெலாம்
மன்னி னார்வலங்
கொண்மறைக் காடரோ
அன்ன மென்னடை
யாளையொர் பாகமாச்
சின்ன வேடம்
உகப்பது செல்வமே. 3
அட்ட மாமலர்
சூடி அடும்பொடு
வட்டப் புன்சடை
மாமறைக் காடரோ
நட்ட மாடியும்
நான்மறை பாடியும்
இட்ட மாக
இருக்கும் இடமிதே. 4
நெய்த லாம்பல்
நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங்
கொண்மறைக் காடரோ
தையல் பாகங்கொண்
டீர்கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை
பாம்புடன் வைப்பதே. 5
துஞ்சும் போதுந்
துயிலின்றி ஏத்துவார்
வஞ்சின் றிவலங்
கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப்
பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பதும்
ஐந்தலை நாகமே 6
திருவி னார்செல்வ
மல்கு விழாவணி
மருவி னார்வலங்
கொண்மறைக் காடரோ
உருவி னாளுமை
மங்கையோர் பாகமாய்
மருவி னாய்கங்கை
யைச்சென்னி தன்னிலே. 7
சங்கு வந்தலைக்
குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங்
கொண்மறைக் காடரோ
கங்கை செஞ்சடை
வைப்பது மன்றியே
அங்கை யில்லனல்
ஏந்தல் அழகிதே. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போனது. 9
குறைக்காட் டான்விட்ட
தேர்குத்த மாமலை
இறைக்காட் டியெடுத்
தான்றலை ஈரைந்தும்
மறைக்காட் டானிறை
ஊன்றலும் வாய்விட்டான்
இறைக்காட் டாயெம்
பிரானுனை ஏத்தவே. 10
திருச்சிற்றம்பலம்