05.022 பூவ ணத்தவன் புண்ணியன்

தலம் : குடமூக்கு
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : கும்பேசுவரர்;
அம்பாள் : மங்களாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

பூவ ணத்தவன்
புண்ணியன் நண்ணியங்
காவ ணத்துடை
யானடி யார்களைத்
தீவ ணத்திரு
நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை
யான்குட மூக்கிலே. 1

பூத்தா டிக்கழி
யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ்
சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி
தன்விசை தீர்கென்று
கூத்தா டியுறை
யுங்குட மூக்கிலே. 2

நங்கை யாளுமை
யாளுறை நாதனார்
அங்கை யாளொ
டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள்
கன்னி யெனப்படுங்
கொங்கை யாளுறை
யுங்குட மூக்கிலே. 3

ஓதா நாவன்
திறத்தை யுரைத்திரேல்
ஏதா னுமினி
தாகும் மியமுனைச்
சேதா ஏறுடை
யானமர்ந் தவிடங்
கோதா விரியுறை
யுங்குட மூக்கிலே. 4

நக்க ரையனை
நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை
வானை வணங்குநீ
அக்க ரையோ
டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை
யான்குட மூக்கிலே. 5

துறவி நெஞ்சின
ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப்
பிதற்றுமின் பித்தராய்
மறவ னாய்ப்பார்த்தன்
மேற்கணை தொட்டவெங்
குறவ னாருறை
யுங்குட மூக்கிலே. 6

தொண்ட ராகித்
தொழுது பணிமினோ
பண்டை வல்வினை
பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம்
மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை
யுங்குட மூக்கிலே. 7

காமி யஞ்செய்து
காலம் கழியாதே,
ஓமி யஞ்செய்தங்
குள்ளத் துணர்மினோ
சாமி யோடு
சரச்சுவ தியவள்
கோமி யும்முறை
யுங்குட மூக்கிலே. 8

சிரமஞ் செய்து
சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல
நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு
மற்றொழிந் தார்க்கெலாங்
குரவ னாருறை
யுங்குட மூக்கிலே. 9

அன்று தானரக்
கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுக்
கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு
நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கேட்
டான்குட மூக்கிலே. 10

திருச்சிற்றம்பலம்