05.024 ஒற்றி யூரும் ஒளிமதி

தலம் : ஒற்றியூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : தொண்டைநாடு
சுவாமி : படம்பக்கநாதர்;
அம்பாள் : வடிவுடையம்மை.

திருச்சிற்றம்பலம்

ஒற்றி யூரும்
ஒளிமதி பாம்பினை
ஒற்றி யூருமப்
பாம்பும் அதனையே
ஒற்றி யூர
வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ
நம்வினை ஓயுமே. 1

வாட்ட மொன்றுரைக்
கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிரு
ளாடி இடுபிணக்
காட்டி லோரி
கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்டலைக்
கையொற்றி யூரரே. 2

கூற்றுத் தண்டத்தை
அஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத்
தடக்கு மரனடி
நீற்றுத் தண்டத்த
ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர்
போலொற்றி யூரரே. 3

சுற்றும் பேய்சுழ
லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர்
பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல்
லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்புக்
குறையும் ஒருவரே. 4

புற்றில் வாளர
வாட்டி உமையொடு
பெற்ற மேறுகந்
தேறும் பெருமையான்
மற்றை யாரொடு
வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை
வானோர் கபாலியே. 5

போது தாழ்ந்து
புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை
வைத்த மணாளனார்
ஓது வேதிய
னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப்
பறையுநம் பாவமே. 6

பலவும் அன்னங்கள்
பன்மலர் மேற்றுஞ்சுங்
கலவ மஞ்ஞைகள்
காரென வெள்குறும்
உலவு பைம்பொழில்
சூழ்திரு வொற்றியூர்
நிலவி னானடி
யேயடை நெஞ்சமே. 7

ஒன்று போலும்
உகந்தவ ரேறிற்று
ஒன்று போலும்
உதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி
மாமதி சூடிற்று
ஒன்று போலுகந்
தாரொற்றி யூரரே. 8

படைகொள் பூதத்தர்
வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர்
சாந்தவெண் ணீற்றினர்
உடையுந் தோலுகந்
தாருறை யொற்றியூர்
அடையு முள்ளத்
தவர்வினை யல்குமே. 9

வரையி னாருயர்
தோலுடை மன்னனை
வரையி னால்வலி
செற்றவர் வாழ்விடந்
திரையி னார்புடை
சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலிந்
தாருயர்ந் தார்களே. 10

திருச்சிற்றம்பலம்