05.023 கொடுங்கண் வெண்டலை

தலம் : நின்றியூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : மகாலட்சுமீசர்;
அம்பாள் : லோகநாயகி.

திருச்சிற்றம்பலம்

கொடுங்கண் வெண்டலை
கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில
ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய
ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத்
திட்ட கருத்தரே. 1

வீதி வேல்நெடுங்
கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளப்
பாலது நின்றியூர்
வேத மோதி
விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை
வைத்தவெங் கள்வரே. 2

புற்றி னார்அர
வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப்
போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை
யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற்
றாவினை பாவமே. 3

பறையின் ஓசையும்
பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும்
மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில்
சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை
உள்குமென் உள்ளமே. 4

சுனையுள் நீலஞ்
சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று
மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல்
சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி
போர்த்த பரமரே. 5

உரைப்பக் கேண்மின்நும்
உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில்
சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய
ராரிவ ரோவெனிற்
திரைத்துப் பாடித்
திரிதருஞ் செல்வரே. 6

கன்றி யூர்முகில்
போலுங் கருங்களி
றின்றி ஏறல
னாலிது வென்கொலோ
நின்றி யூர்பதி
யாக நிலாயவன்
வென்றி யேறுடை
எங்கள் விகிர்தனே. 7

நிலையி லாவெள்ளை
மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயில்
எய்த கொடியவன்
நிலையி னார்வயல்
சூழ்திரு நின்றியூர்
உரையி னாற்றொழு
வார்வினை ஓயுமே. 8

அஞ்சி யாகிலும்
அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி
நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில்
எய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை
சூடிய கூத்தனே. 9

எளிய னாமொழி
யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி
லாய மெடுத்தவன்
நெளிய வூன்ற
வலானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு
வார்வினை யல்குமே. 10

திருச்சிற்றம்பலம்