05.059 பொருமாற் றின்படை

தலம் : மாற்பேறு
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : தொண்டைநாடு
சுவாமி : மால்வணங்கீசர்;
அம்பாள் : கருணாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

பொருமாற் றின்படை
வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர்
கொண்டு வழிபடுங்
கருமாற் கின்னருள்
செய்தவன் காண்டகு
திருமாற் பேறு
தொழவினை தேயுமே. 1

ஆலத் தார்நிழ
லில்லறம் நால்வர்க்குக்
கோலத் தாலுரை
செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள்
செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்றொழு
வார்க்கிட ரில்லையே. 2

துணிவண் ணச்சுட
ராழிகொள் வானெண்ணி
அணிவண் ணத்தலர்
கொண்டடி யர்ச்சித்த
மணிவண் ணற்கருள்
செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க்
கில்லையாம் பாவமே. 3

தீத வைசெய்து
தீவினை வீழாதே
காதல் செய்து
கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில்
மாற்பேறு கைதொழப்
போது மின்வினை
யாயின போகுமே. 4

வார்கொள் மென்முலை
மங்கையொர் பங்கினன்
வார்கொள் நன்முர
சம்மறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில்
மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர்
பொன்னுல கத்திலே. 5

பண்டை வல்வினை
பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன்
கேண்மின் ஒளிகிளர்
வண்டு சேர்பொழில்
சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத்
தீருங் கவலையே. 6

மழுவ லான்றிரு
நாமம் மகிழ்ந்துரைத்
தழவ லார்களுக்
கன்புசெய் தின்பொடும்
வழுவி லாவருள்
செய்தவன் மாற்பேறு
தொழவ லார்தமக்
கில்லை துயரமே. 7

முன்ன வனுல
குக்கு முழுமணிப்
பொன்ன வன்றிகழ்
முத்தொடு போகமாம்
மன்ன வன்றிரு
மாற்பேறு கைதொழும்
அன்ன வரெமை
யாளுடை யார்களே. 8

வேட னாய்விச
யன்னொடும் எய்துவெங்
காடு நீடுகந்
தாடிய கண்ணுதல்
மாட நீடுய
ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு
வார்பர லோகமே. 9

கருத்த னாய்க்கயி
லாய மலைதனைத்
தருக்கி னாலெடுத்
தானைத் தகரவே
வருத்தி யாரருள்
செய்தவன் மாற்பேறு
அருத்தி யாற்றொழு
வார்க்கில்லை அல்லலே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 10

திருச்சிற்றம்பலம்