07.029 இத்தனை யாமாற்றை

திருமுறை : ஏழாம் திருமுறை
தலம் : குருகாவூர் வெள்ளடை
அ௫ளியவர் : சுந்தரர்
பண் : நட்டராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை

திருச்சிற்றம்பலம்

இத்தனை யாமாற்றை
அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 1

ஆவியைப் போகாமே
தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக்
குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங்
கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 2

பாடுவார் பசிதீர்ப்பாய்
பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக
உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக்
கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 3

வெப்பொடு பிணியெல்லாந்
தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம்
ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய
அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 4

வரும்பழி வாராமே
தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச்
சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை
அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 5

பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 6

போந்தனை தரியாமே
நமன்தமர் புகுந்தென்னை
நோந்தன செய்தாலும்
நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந்
தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 7

மலக்கில்நின் னடியார்கள்
மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய
தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங்
கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 8

படுவிப்பாய் உனக்கேயாட்
பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன்
தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார்
கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 9

வளங்கனி பொழில்மல்கு
வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர்
வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன்
வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை
பத்தர்கட் குரையாமே. 10

திருச்சிற்றம்பலம்