04.021 முத்து விதான

தலம் : ஆரூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : புற்றிடங்கொண்டார்;
அம்பாள் : அல்லியம்பூங்கோதை
.

திருச்சிற்றம்பலம்

முத்து விதான மணிப்பொற்
கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர்
சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை
மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 1

நணியார் சேயார் நல்லார்
தீயார் நாடோ றும்
பிணிதான் தீரும் என்று
பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா
மணாளா என்பார்கட்
கணியான் ஆரூர் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 2

வீதிகள் தோறும் வெண்கொடி
யோடுவி தானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர்மா
மணிகள் ஒளிதோன்றச்
சாதிக ளாய பவளமு
முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 3

குணங்கள் பேசிக் கூடிப்
பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மிற் பித்தரைப்
போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர்
வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 4

நிலவெண் சங்கும் பறையும்
ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல
வடங்கள் பரந்தெங்குங்
கலவ மஞ்ஞை காரென்
றெண்ணிக் களித்துவந்
தலம ராரூர் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 5

விம்மா வெருவா விழியாத்
தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலராய்த் தரியார்
தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை
எனப்பன் என்பார்கட்
கம்மான் ஆரூர் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 6

செந்துவர் வாயார் செல்வன
சேவடி சிந்திப்பார்
மைந்தர்க ளோடு மங்கையர்
கூடிம யங்குவார்
இந்திர னாதி வானவர்
சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 7

முடிகள் வணங்கி மூவா
தார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வான்அர
மங்கையர் பின்செல்லப்
பொடிகள் பூசிப் பாடுந்
தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 8

துன்பம் நும்மைத் தொழாத
நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை யேத்து
நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப்
பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 9

பாரூர் பௌவத் தானைப்
பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாடல் ஆடல்
அறாத செம்மாப்பார்ந்
தோரூர் ஒழியா துலகம்
எங்கும் எடுத்தேத்தும்
ஆரூ ரன்றன் ஆதிரை
நாளால் அதுவண்ணம். 10

திருச்சிற்றம்பலம்