தலம் : நாகைக்காரோணம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம் திருமுறை
பண் : திருநேரிசை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : காயாரோகணேசுவரர்;
அம்பாள் : நீலாயதாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
மனைவிதாய் தந்தை மக்கள்
மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி
வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை
மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில்
உய்யலாம் நெஞ்சி னீரே. 1
வையனை வைய முண்ட
மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற்
திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே
அம்மநாம் உய்ந்த வாறே. 2
நிருத்தனை நிமலன் றன்னை
நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை
விளைபொருள் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்த லால்நாம்
உய்ந்தவா நெஞ்சி னீரே. 3
மண்டனை இரந்து கொண்ட
மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த
தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே
அம்மநாம் உய்ந்த வாறே. 4
நிறைபுனல் அணிந்த சென்னி
நீணிலா அரவஞ் சூடி
மறையொலி பாடி யாடல்
மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த
இடும்பைபோய் இன்ப மாமே. 5
வெம்பனைக் கருங்கை யானை
வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த
காலனை ஞால மேத்தும்
உம்பனை உம்பர் கோனை
நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே
திண்ணம்நாம் உய்ந்த வாறே. 6
வெங்கடுங் கானத் தேழை
தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற்
கடுசரம் அருளி னானை
மங்கைமார் ஆட லோவா
மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப்
பெற்றுநாங் களித்த வாறே. 7
தெற்றினர் புரங்கள் மூன்றுந்
தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலும் நாகைக்
காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்
பிறந்தவர் பிறந்தி லாரே. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9
கருமலி கடல்சூழ் நாகைக்
காரோணர் கமல பாதத்
தொருவிரல் நுதிக்கு நில்லா
தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ
டெம்பிரான் செம்பொ னாகந்
திருவடி தரித்து நிற்கத்
திண்ணம்நாம் உய்ந்த வாறே
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது. 10
திருச்சிற்றம்பலம்