தலம் : நெய்த்தானம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : நெய்யாடியப்பர்;
அம்பாள் : பாலாம்பிகை.
திருச்சிற்றம்பலம்
கொல்லி யான்குளிர்
தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர
மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை
யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு
வார்சுடர் வாணரே. 1
இரவ னையிடு
வெண்டலை யேந்தியைப்
பரவ னைப்படை
யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை
யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு
வார்கொடி வாணரே. 2
ஆனி டையைந்தும்
ஆடுவ ராரிருள்
கானி டைநடம்
ஆடுவர் காண்மினோ
தேனி டைமலர்
பாயுநெய்த் தானனை
வானி டைத்தொழு
வார்வலி வாணரே. 3
விண்ட வர்புர
மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி
தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி
யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு
வார்சுடர் வாணரே. 4
முன்கை நோவக்
கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது
சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு
நவின்றநெய்த் தானனைத்
தங்கை யாற்றொழு
வார்தலை வாணரே. 5
சுட்ட நீறுமெய்
பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர்
நள்ளிருட் பேயொடே
சிட்டர் வானவர்
தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு
வாரின்ப வாணரே. 6
கொள்ளித் தீயெரி
வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை
யாடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித்
தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தாற்றொழு
வாரும்பர் வாணரே. 7
உச்சி மேல்விளங்
கும்மிள வெண்பிறை
பற்றி யாடர
வோடுஞ்ச டைப்பெய்தான்
நெற்றி யாரழல்
கண்டநெய்த் தானனைச்
சுற்றி மெய்தொழு
வார்சுடர் வாணரே. 8
மாலொ டும்மறை
யோதிய நான்முகன்
காலொ டும்முடி
காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச்
செய்யும்நெய்த் தானனை
மாலொ டுந்தொழு
வார்வினை வாடுமே. 9
வலிந்த தோள்வலி
வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை
யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம்
போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி
வார்வினை பாறுமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10
திருச்சிற்றம்பலம்