தலம் : நாரையூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : சௌந்தரேசுவரர்;
அம்பாள் : திரிபுரசுந்தரி
திருச்சிற்றம்பலம்
வீறு தானுடை
வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங்
கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில்
நாரையூர் நம்பனுக்(கு)
ஆறு சூடலும்
அம்ம அழகிதே. 1
புள்ளி கொண்ட
புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண்
பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை
நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலும்
அம்ம அழகிதே. 2
வேடு தங்கிய
வேடமும் வெண்டலை
ஓடு தங்கிய
வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய
நாரையூ ரான்நடம்
ஆடு பைங்கழல்
அம்ம அழகிதே. 3
கொக்கின் றூவலுங்
கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை
மாலை விரிசடை
நக்க னாகிலும்
நாரையூர் நம்பனுக்(கு)
அக்கி னாரமும்
அம்ம அழகிதே. 4
வடிகொள் வெண்மழு
மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவ
ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம்வடி வம்ம அழகிதே. 5
சூலம் மல்கிய
கையுஞ் சுடரொடு
பாலும் நெய்தயி
ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய
நாரையூர் நம்பனுக்(கு)
ஆல நீழலும்
அம்ம அழகிதே. 6
பண்ணி னான்மறை
பாடலொ டாடலும்
எண்ணி லார்புர
மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர்
தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை
அம்ம அழகிதே. 7
என்பு பூண்டெரு
தேறி இளம்பிறை
மின்பு ரிந்த
சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி
தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது
அம்ம அழகிதே. 8
முரலுங் கின்னரம்
மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி
யாடலு நீடுவான்
நரலும் வாரிநன்
னாரையூர் நம்பனுக்(கு)
அரவும் பூணுதல்
அம்ம அழகிதே. 9
கடுக்கை யஞ்சடை
யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக்
கன்றலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற
நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையும்
அம்ம அழகிதே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10
திருச்சிற்றம்பலம்