தலம் : பொது
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : பொது
சிறப்பு: மனத்தொகை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பொன்னுள் ளத்திரள்
புன்சடை யின்புறம்
மின்னுள் ளத்திரள்
வெண்பிறை யாயிறை
நின்னுள் ளத்தருள்
கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்துள
தெந்தை பிரானிரே. 1
முக்க ணும்முடை
யாய்முனி கள்பலர்
தொக்கெ ணுங்கழ
லாயொரு தோலினோ
டக்க ணும்மரை
யாயரு ளேயலா
தெக்க ணும்மிலன்
எந்தை பிரானிரே. 2
பனியாய் வெங்கதிர்
பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல
கம்முழு தாளினுந்
தனியாய் நீசரண்
நீசல மேபெரி
தினியாய் நீயெனக்
கெந்தை பிரானிரே. 3
மறையும் பாடுதிர்
மாதவர் மாலினுக்
குறையு மாயினை
கோளர வோடொரு
பிறையுஞ் சூடினை
யென்பத லாற்பிறி
திறையுஞ் சொல்லிலை
எந்தை பிரானிரே. 4
பூத்தார் கொன்றையி
னாய்புலி யின்னதள்
ஆர்த்தா யாடர
வோடன லாடிய
கூத்தா நின்குரை
யார்கழ லேயல
தேத்தா நாவெனக்
கெந்தை பிரானிரே. 5
பைம்மா லும்மர
வாபர மாபசு
மைம்மால் கண்ணியோ
டேறுமைந் தாவெனும்
அம்மா லல்லது
மற்றடி நாயினேற்
கெம்மா லும்மிலன்
எந்தை பிரானிரே. 6
வெப்பத் தின்மன
மாசு விளக்கிய
செப்பத் தாற்சிவ
னென்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும்
ஒண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மிலன்
எந்தை பிரானிரே. 7
திகழுஞ் சூழ்சுடர்
வானொடு வைகலும்
நிகழு மொண்பொரு
ளாயின நீதியென்
புகழு மாறு
மலானுன பொன்னடி
இகழு மாறிலன்
எந்தை பிரானிரே. 8
கைப்பற் றித்திரு
மால்பிர மன்னுனை
எப்பற் றியறி
தற்கரி யாயருள்
அப்பற் றல்லது
மற்றடி நாயினேன்
எப்பற் றும்மிலன்
எந்தை பிரானிரே. 9
எந்தை யெம்பிரான்
என்றவர் மேல்மனம்
எந்தை யெம்பிரான்
என்றிறைஞ் சித்தொழு
தெந்தை யெம்பிரான்
என்றடி யேத்துவார்
எந்தை யெம்பிரான்
என்றடி சேர்வரே. 10
திருச்சிற்றம்பலம்