07.050 சித்தம் நீநினை என்னொடு

திருச்சிற்றம்பலம்

சித்தம் நீநினை என்னொடு
சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி
போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின்
றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட
றாப்புன வாயிலே. 1

கருது நீமனம் என்னொடு
சூளறும் வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு
மாற்கிட மாவது
மருத வானவர் வைகும்
இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல
றாப்புன வாயிலே. 2

தொக்கா யமனம் என்னொடு
சூளறும் வைகலும்
நக்கான் நமை யாளுடை
யான்நவி லும்மிடம்
அக்கோ டரவார்த் தபிரா
னடிக் கன்பராய்ப்
புக்கா ரவர் போற்றொழி
யாப்புன வாயிலே. 3

வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு
சூளறும் வைகலும்
பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன்
னாமது வேபுகல்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி
யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு
மான்புன வாயிலே. 4

நில்லாய் மனம் என்னொடு
சூளறும் வைகலும்
நல்லான் நமை யாளுடை
யான்நவி லும்மிடம்
வில்லாய்க் கணை வேட்டுவர்
ஆட்ட வெருண்டுபோய்ப்
புல்வாய்க் கணம் புக்கொளிக்
கும்புன வாயிலே. 5

மறவல் நீமனம் என்னொடு
சூளறும் வைகலும்
உறவும் ஊழியு மாயபெம்
மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட்
டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ்
சூழ்புன வாயிலே. 6

ஏசற்று நீநினை யென்னொடு
சூளறும் வைகலும்
பாசற் றவர் பாடிநின்
றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு
போதும் வணங்கிடப்
பூசற் றுடிபூச லறாப்
புன வாயிலே. 7

கொள்ளி வாயின கூரெயிற்
றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக்
கும்மிடஞ் செந்தறை
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங்
கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக்
கும்புன வாயிலே. 8

எற்றே நினை என்னொடுஞ்
சூளறும் வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை
யாயின மாய்ந்தறக்
கற்றூறு கார்க் காட்டிடை
மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக்
கும்புன வாயிலே. 9

பொடியாடு மேனியன் பொன்புனஞ்
சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல
வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை யேத்தவல்
லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல்
லார்க்கில்லை குற்றமே. 10

திருச்சிற்றம்பலம்