திருச்சிற்றம்பலம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!
அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி!
வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே,
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மதயானை ஈர் உரிவை போர்த்தாய், போற்றி!
கொங்கு அலரும் நறுங்கொன்றைத் தாராய், போற்றி!
கொல் புலித் தோல் ஆடைக் குழகா, போற்றி!
அங்கணனே, அமரர்கள் தம் இறைவா, போற்றி!
ஆலமர நீழல் அறம் சொன்னாய், போற்றி!
செங்கனகத் தனிக் குன்றே, சிவனே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 2
மலையான் மடந்தை மணாளா, போற்றி!
மழவிடையாய்! நின் பாதம் போற்றி போற்றி!
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய், போற்றி!
நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய், போற்றி!
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ, போற்றி!
ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய், போற்றி!
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 3
பொன் இயலும் மேனியனே, போற்றி போற்றி!
பூதப்படை உடையாய், போற்றி போற்றி!
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய், போற்றி!
மறி ஏந்து கையானே, போற்றி போற்றி!
உன்னுமவர்க்கு உண்மையனே, போற்றி போற்றி!
உலகுக்கு ஒருவனே, போற்றி போற்றி!
சென்னி மிசை வெண் பிறையாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 4
நஞ்சு உடைய கண்டனே, போற்றி போற்றி!
நல்-தவனே, நின் பாதம் போற்றி போற்றி!
வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே, போற்றி!
வெண்மதி அம் கண்ணி விகிர்தா, போற்றி!
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய், போற்றி!
தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ, போற்றி!
செஞ்சடையாய், நின் பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 5
சங்கரனே, நின் பாதம் போற்றி போற்றி!
சதாசிவனே, நின் பாதம் போற்றி போற்றி!
பொங்கு அரவா, நின் பாதம் போற்றி போற்றி!
புண்ணியனே, நின் பாதம் போற்றி போற்றி!
அம் கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா, நின் பாதம் போற்றி போற்றி!
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 6
வம்பு உலவு கொன்றைச் சடையாய், போற்றி!
வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய், போற்றி!
கொம்பு அனைய நுண் இடையாள் கூறா, போற்றி!
குரை கழலால் கூற்று உதைத்த கோவே, போற்றி!
நம்புமவர்க்கு அரும்பொருளே, போற்றி போற்றி!
நால்வேதம் ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
செம்பொனே, மரகதமே, மணியே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 7
உள்ளம் ஆய் உள்ளத்தே நின்றாய், போற்றி!
உகப்பார் மனத்து என்றும் நீங்காய், போற்றி!
வள்ளலே, போற்றி! மணாளா, போற்றி!
வானவர் கோன் தோள் துணித்த மைந்தா, போற்றி!
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா, போற்றி!
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய், போற்றி!
தெள்ளு நீர்க் கங்கைச் சடையாய், போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 8
பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி!
புத்தேளிர் போற்றும் பொருளே, போற்றி!
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி!
திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி!
சாவாமே காத்து என்னை ஆண்டாய், போற்றி!
சங்கு ஒத்த நீற்று எம் சதுரா, போற்றி!
சே ஆர்ந்த வெல் கொடியாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 9
பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி!
பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி!
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி!
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி!
அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி!
அன்று அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும்,
சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!. 10
திருச்சிற்றம்பலம்
