( 1 )
மகரம் அளறு
மகரம் அளறு இடைபுரள உரகம் கணபண மவுலி
மதியும் இரவியும் அலையவே
வளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகல
மகிழ்வு பெறும் *அறு சிறையவாம்
சிகரவரை மனை மறுகு தொறும் நுளைய மகளிர் செழு
செநெல்களொடு தரளம் இடவே
செகம் சிரம் பகிரதி முதல் நதிகள் கதி பெற உததி
திடர்அடைய நுகரும் வடிவேல்
தகரம் மிருகமதம் என மணம் மருவு கட கலுழி
தரு கவுளும் உறு வள் எயிறும்
தழை செவியும் நுதல் விழியும் உடைய ஒரு கடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்
குகர மலை எயினர் குல மட மயிலும் என இருவர்
குயமொடு அமர் புரியும் முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலைய விடு கொடிய வேலே.
( 2 )
வெங்காள கண்டர்
வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலம் கல்லி
வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்
சதுர்முகனும் நின்று இரப்ப
சயிலமொடு சூரன் உடல் ஒருநொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாஷி சைவ
சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குல அந்தகன்
செம்பொன் திருக்கை வேலே.
( 3 )
வேதாள பூதமொடு
வேதாள பூதமொடு காளி காளாத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்
வெம் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்க வந்தே
ஆதார கமடமும் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரி எலாம்
அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்த வைவேல்
தாது ஆர் மலர்ச் சுனைப் பழநி மலை சோலை மலை
தனிப் பரங்குன்று ஏரகம்
தணிகை செந்தூர் இடைக்கழி ஆவினன்குடி
தடங்கடல் இலங்கை அதனில்
போது ஆர் பொழில் கதிர்காமத் தலத்தினைப்
புகழும் அவர் அவர் நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செம் கை வேலே.
( 4 )
அண்டர் உலகும் சுழல
அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே
அலை கடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
அகில தலமும் சுழலவே
மண்டலம் நிறைந்த ரவி சத கோடி மதி உதிரம்
மாணப் பிறங்க அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் மருளச் சிரம
வகை வகையில் சுழலும் வேல்
தண்டமுடம் கொடிய பாசமுடனும் கரிய
சந்தமுடனும் பிறைகள்போல்
தந்தமுடனும் தழலும் வெம் கணுடனும் பகடு
தன்புறம் வருஞ் சமனை யான்
கண்டு குலையும் பொழுதில் அஞ்சல் என மென்சரண
கஞ்சம் உதவும் கருணைவேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம் புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே.
( 5 )
ஆலமாய் அவுணரு
ஆலமாய் அவுணருக்கு அமரருக்கு அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளி மீது
அரிய தவமுநிவருக்கு இந்துவின் தண் என்று
அமைந்து அன்பருக்கு முற்றா
மூலமாம் வினை அறுத்து அவர்கள் வெம் பகையினை
முடித்து இந்திரர்க்கும் எட்டா
முடிவில் ஆநந்தம் நல்கும் பதம் அளித்து எந்த
மூதண்டமும் புகழும் வேல்
ஏல மா யானையின் கோடு அதில் சொரி முத்தும்
இன்பணைகள் உமிழும் முத்தும்
இனி வாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவம் ஆரும்
தாலம் மா மரம் முதல் பொருள் படைத்திடும் எயினர்
தரு வநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவண குமரன் வேலே.
( 6 )
பந்தாடலிற்கழ
பந்து ஆடலில் கழங்கு ஆடலில் சுடர் ஊசல்
பாடலினொடு ஆடலில் எலாம்
பழம் தெவ்வர் கட்கம் துணித்து இந்திரற்கு அரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தம் ஆரு நாள் மலர்க் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர்தாமும்
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகிநித் தரங்கச் சடிலருக்கு அரிய
மந்த்ர உபதேச நல்கும்
வரதேசிகன் கிஞ்சுகச் சிகா அலங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்து ஆர் மலர்க் கடம்பும் செச்சை மாலையும்
குவளையும் செம் காந்தளும்
கூதாள மலரும் தொடுத்து அணியும் மார்பினன்
கோலத் திருக் கை வேலே.
( 7 )
அண்டங்கள் ஒருகோடி
அண்டங்கள் ஒருகோடி ஆயினும் குலகிரி
அநந்தம் ஆயினும் மேவினால்
அடைய உருவி புறம் போவது அல்லது தங்கல்
அறியாது சூரன் உடலைக்
கண்டம் பட பொருது காலனும் குலைவு உறும்
கடிய கொலை புரியும் அது செம்
கநக அசலத்தை கடைந்து முனை இட்டு
கடுக்கின்ற துங்க நெடு வேல்
தண்டம் தநு திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவ அந்தகன் மாயவன்
தழல் விழி கொடுவரி பரு உடல் பல தலை
தமனிய சுடிகையின் மேல்
வண்டு ஒன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மங்கையும் பதம் வருடவே
மதுமலர் கண் துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக் கை வேலே.
( 8 )
மாமுதல் தடிந்து
மா முதல் தடிந்து தண் மல்கு கிரி ஊடு போய்
வலிய தானவர் மார்பு இடம்
வழி கண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
மகவான்தனை சிறைவிடுத்து
ஓம இருடி தலைவர் ஆசி பெற்று உயர் வானில்
உம்பர்சொல் துதி பெற்று நா
உடைய கீரன் தனது பாடல் பெற்று உலகுதனில்
ஒப்பு இல் புகழ் பெற்ற வை வேல்
சோமகலச ப்ரபா அலங்கார தர ஜடா
சூடி கால அந்த காலர்
துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசம் சூலம்
துரக கேசரம் அம்பரம்
சேம வடவாம் அம்புயம் பரண சங்கு ஆபரண
திகம்பர த்ரியம்பக மகா
தேவ நந்தன கஜாநந சகோதர குகன்
செம்பொன் திருக்கை வேலே.
( 9 )
தேடுதற் கரிதான
தேடுதற்கு அரிது ஆன நவமணி அழுத்தி இடு
செம் கரனை அமுதம் வாய் கொள்
செயம் அளித்து அருள் எனக்கு என உவப்பொடு வந்து
சேவடி பிடித்தது எனவும்
நீடு மை கடல் சுட்டதிற்கு அடைந்து எழு கடலும்
நீ எமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
நிகழ்கின்ற துங்க நெடு வேல்
ஆடும் ஐ கணபண கதிர் முடி புடை எயிற்று
அடல் எரி கொடிய உக்ர
அழல் விழி படு கொலை கடைய கட்செவியினுக்கு
அரசினை தனி எடுத்தே
சாடும் மைப்புயல் எனப் பசுநிற சிகரியில்
தாய் திமித்துடன் நடிக்கும்
சமர மயில் வாகனன் அமரர் தொழும் நாயகன்
சண்முகன் தன்கை வேலே.
( 10 )
வலாரியல லாகுலமி
வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே கரிய
மால் அறியும் நாலு மறை நூல்
வலான் அலைவு இலான் நசிவு இலான் மலை விலான் இவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம் மகர ஆலய சலங்களும்
உலோக நிலை நீர் நிலை இலா
ஒலா ஒலி நிசாசரர் உலோகம் அது எலாம் அழல்
உலாவிய நிலாவிய கொலைவேல்
சிலா வட கலா விநொதவா சிலி முகா விலொசனா
சின சிலா தணி விலா
சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய
சேவக சராப முகில் ஆம்
விலாச கலியாண கலை சேர பசு மேலை முலை
மேவிய விலாச அகலன்
விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைஞன் கை வேலே.
