ஒவ்வொரு வரிக்கும் “ஓம் சக்தி” என்று சொல்ல வேண்டும்
எட்டுவகை லட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டும் வகை நானறிந்தேன் கோலமயி லானவளே!
வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லட்சுமியே
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம் (1)
சிந்தனைக்குச் செவிசாய்த்து சீக்கிரமென் னில்லம்வந்து
உந்தனருள் தந்தருள்வாய் உலகமெனைப் பாராட்டும்!
வந்தமர்ந்து உறவாடி வரங்கள் பல தருவதற்கே
சந்தான லட்சுமியே தான் வருவாய் இதுசமயம் (2)
யானையிரு புறமும்நிற்கும் ஆரணங்கே உனைத்தொழுதால்
காணுமொரு போகமெலாம் காசினியில் கிடைக்குமென்பார்
தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்தகஜ லட்சுமியே
வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம் (3)
அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்
உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ!
இன்றோடு துயர்விலக இனியதன லட்சுமியே
மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம் (4)
எங்கள் பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும்
தங்கநிறக் கதிராகித் தழைத்துச் சிரிப்பவளே!
பங்குபெறும் வாழ்க்கையினைப் பார்தான்ய லட்சுமியே!
மங்கலமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம் (5)
கற்றுநான் புகழடைந்து காசினியில் எந்நாளும்
வெற்றியின் மேல் வெற்றிபெற வேணுமென்று கேட்கின்றேன்
பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார்விஜய லட்சுமியே
வற்றாத அருட்கடலே வருவாய் இதுசமயம் (6)
நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால்
தஞ்சமென உனையடைந்தேன் தாமரைமேல் நிற்பவளே
அஞ்சாது வரம்கொடுக்கும் அழகுமகாலட்சுமியே!
வஞ்சமிலா தெனக்கருள வருவாய் இதுசமயம் (7)
ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும்
குழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே!
வாழும் வழிகாட்டிடவே வாவீரலட்சுமியே!
மாலையிட்டுப் போற்றுகிறேன் வருவாய் இதுசமயம்! (8)
கவிஞர் சிவல்புரி சிங்காரம்