ஸ்ரீ நடராஜர் பதிகம்

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!
ஆதியாய் அநாதியாய்ச் அமைந்த ஜோதி ரூபனே!
மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனே
மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே! (ஓம்)

எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம்: தொடுத்த கூரை கோபுரம்:
செந்தமிழ்ச் சொல் மந்திரம் : திருந்தும் அன்பே ஆகமம்:
சிவந்தபாத பங்கையம் உவந்தருள் நடேசனே! (ஓம்)

மன்றிலே எடுத்த கால் என் மனையிலும் எடுத்துவை :
மனதிலே நினைத்த நன்மை விரைவிலே முடித்துவை:
என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்துவை:
ஏத்தும் அன்பர் குழுவில் என்னைச் சேர்த்துவை நடேசனே! (ஓம்)

ஆ-பயந்த ஐந்தினோடு பால், பழம், பஞ் சாமிர்தம்
ஆலைவாய்க் கரும்பு, தெங்குத் தேன், சுகந்த சந்தனம்
நீ-பயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே!
நேர்த்தியாய் அனைத்தும் ஆடி வாழ்த்துவாய் நடேசனே! (ஓம்)

அட்ட நாக பூஷனம் அளிக்க வல்லன் அல்லனே!
ஆனை, மான், சிறுத்தை வேட்டை ஆட வல்லன் அல்லனே!
இட்டமாலை ஆடையோடு தொட்டு வைத்த சந்தனம்
என்றும் நல்க வல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே! (ஓம்)

வில்லினால் அடிக்கவோ? வீசுகல் பொறுக்கவோ?
மிதித்தபோது கை, பிரம்பை மேலும் நான் எடுக்கவோ?
நல்லபிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ?
நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே (ஓம்)

ஆட, நீ எடுத்தாய் அறிந்தவர் இயம்புவர்
அல்ல அல்ல என் தலைமேல் சூட என்று சொல்கிறேன்!
ஈடில்லா தெய்வம் நீ இடப்புரம் எடுத்தக்கால்
எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே! (ஓம்)

மழுவெடுத் (து) எதைவிளக்க மன்றுதோறும் ஓடினாய்?
மதியெடுத்த சிரம் இருக்க மத்தனாய் ஏன் ஆடினாய்?
கழுதெடுத்து நடனம் ஆடும் காட்டில் என்ன தேடினாய்?
கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே! (ஓம்)

எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே!
இன்று நான் படைத்த யாவும் உண்ணுவாய் சபேசனே!
தடுத்த பண்டை வினையகற்றி தாங்குவாய் சர்வேசனே!
சரணம் உன்னை அன்றி ஏது? தாங்குவாய் நடேசனே! (ஓம்)

வாழி நீ படைக்கும் தெய்வம் மலர் அணை அமர்ந்ததாம்!
வகுத்தளிக்கும் தெய்வம் கூட அரவணை கிடந்ததாம்!
ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே!
ஓய்ந்து சற்றென் நெஞ்சணைக்கண் சாய்ந்து கொள் நடேசனே! (ஓம்)

ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம : ரூபனே!
ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே! சங்கீதனே!
வாமியாத் தழைத்த சிவ காமிக்காதல் நேசனே!
மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே! (ஓம்)

அருட்கவி. கு.செ. இராமசாமி