மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடி யும்நீ
மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
மண்டல மிரண்டேழும் நீ
பெண்ணும்நீ ஆணும்நீ பல்லுயிர்க் குயிரும்நீ
பிறவும்நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும்நீ இருளும்நீ ஒளியும்நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணாக் கிரகங்கள் ஒன்பதும்நீ இந்தப்
புவனங்கள் ஈன்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோடி களீன்ற அப்பனே
என் குறைக ளார்க்கு ரைப்பேன்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ் நடராஜனே (1)
மானாட மழுவாட மதியாடப் புணலாட
மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாடத் திரையாட
மறைதந்த பிரம னாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாடக்
குழந்தை முருகேச னாட
ஞானசம் பந்தரொடு யிந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட
நரதும்பை யருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட யெனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே. (2)
கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பிக்
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்தநித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைத்தேடி
ஓயாமலிரவு பகலும்
உண்டுண்டு றங்குவதைக் கண்டதே யல்லாது
ஒருபயன டைந்திலேனே
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங் களென்னும்
தாவரப் பின்ன லிட்டுத்
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யிவ்வண் ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளா
திருப்ப துன்ன ழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (3)
பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணத்
தம்பனம் வசிய மல்ல
பாதாள வஞ்சனம் பரகாய ப்ரவேச
மதுவல்ல சால மல்ல
அம்புகுண்டு கள்விலக மொழியும்மந்தி ரமல்ல
ஆகாய குளிகை யல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடி களல்ல
அரியமோ கனமு மல்ல
கும்ப முனி மச்ச முனி சட்ட முனி பிரம்மரிஷி
கொங்கணர் புலிப் பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி யிவரெலாங்
கூறிடும் வைத்தியமல்ல
என்மனதுன் னடி விட்டு நீங்காது நிலைநிற்க
யேதுளவு புகல வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (4)
நொந்து வந்தேனென்று ஆயிரஞ்சொல்லியுஞ்
செவியென்ன மந்தமுண்டோ
நுட்ப நெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தை யுண்டோ
சந்தமுந் தஞ்சமென் றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுக னறுமுகன் இருபிள்ளை யில்லையே
தந்தை நீமலடு தானோ
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்று மறிகிலேனே
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கையிது வல்லவோ
இந்தவவுல கீரேழு மேனளித்தாய் சொல்லு
இனியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (5)
வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும்
வாஞ்சையில் லாத போதிலும்
வாலாய மாயக்கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனை யில்லாமலே பாடினும்
முர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே கவரினும்
முழுகாமி யேயாகினும்
பழியெனக்கல்லவோ தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் ஏசார்களோ
பாரறிய மனைவிக்குப் பாதியுட லீந்தநீ
பாலகனைக் காக்கொ ணாதோ
எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய மைத்தநீ
யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (6)
அன்னை தந்தை என்னை யீன்றதற் கழுவனோ
அறிவி லாதற் கழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப் பென்னவினை செய்தனென்ற ழுவனோ
என் மூடறிவுக் கழுவனோ
முன்னிலென் வினைவந்து மூளுமென் றழுவனோ
முத்தி வருமென் றுணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ
தவமென் னவென் றழுவனோ
தையலர்க் கழுவனோ மெய்வளர்கழுவனோ
தரித்திர திசைக் கழுவனோ
ன்னமென்ன பிறவி வருமோவென் றழுவனோ
யெல்லா முறைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (7)
காயாமுன் மரமீதுபூ பிஞ்ச றுத்தனோ
கன்னியர் கள்பழி கொண்டனோ
கடனென்று பொருள்பறித்தே வயிறெ ரித்தனோ
கிளை வழி யில்முள் ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ
தந்த பொருளில்லை யென்றனோ
தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தனோ
தவசிகளை யேசி னேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தேனோ
வானவரைப் பழித்திட்டனோ
வடிவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்த பின் என் செய்தனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
யெல்லாம் பொறுத்த ருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (8)
தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
தன்பிறவி யுறவு கோடி
தனமலை குவிந்தென்ன கனபெய ரெடுத்தென்ன
தரணியை யாண்டு மென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாயிருந்தென்ன
சீஷர்கள் யிருந்து மென்ன
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிக ளெல்லாம்
ஓயாது மூழ்கினும் யென்னபலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தவிர்க்க
உதவுமோ யிதுவெல்லாம் சந்தையுறவென்றுதான்
உன்னிரு பாதம் பிடித்தேன்
யார்மீது உன்மனமிருந்தாலு முன்கடைக்கண்
பார்வையது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (9)
இன்னமுஞ் சொல்லவோ உன்மனம் கல்லோ
இரும்போ பெரும் பாறையோ
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகு தானோ
என்னன்னை மோகமோ இதுவென்ன கோபமோ
இதுவுமுன் செய்கை தானோ
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமே
யானாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங் குசென்றாலும் விழலா வனோநான்
உனையடுத் துங் கெடுவேனோ
ஓகோவிது உன் குற்ற மென்குற்ற மென்றுமிலை
உற்றுப்பார் மாபெற் றவையா
என்குற்றமாயினும் உன்குற்றமாயினும்
இனியருளளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (10)
சனிராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய்குரு
சந்திரன் சூரியன் வரை
சற்றெனக் குள்ளாக்கி ராசிபன்னி ரெண்டையும்
சமமாய் நிறுத்தி யுடனே
பனியொத்த நட்சதிரங்களி ருபத்தேழும்
பக்குவப் படுத்திப் பின்னால்
பகர்கின்ற கரணங்கள் பதினொன்றையும் வெட்டிப்
பலரையும் அதட்டி யென்முன்
கனிபோலவேபேசி கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையும் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்
தொண்டர்கள் தொழும்பனாக்கி
இனியவள மருவு தேவை நகர்தொண்டனெனை
யாள் வதினி யுன்க டன்காண்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராஜனே (11)