மூன்றாம் திருமொழி – மாணிக்கம் கட்டி

கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்

44) மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ. (2)

45) உடையார்கனமணியோடு ஒண்மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய்! அழேல்அழேல்தாலேலோ உலகமளந்தானே! தாலேலோ.

46) என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ தாமரைக்கண்ணனே! தாலேலோ.

47) சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே! தாலேலோ தேவகிசிங்கமே! தாலேலோ.

48) எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ தூமணிவண்ணனே! தாலேலோ.

49) ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய்! தாலேலோ சுந்தரத்தோளனே! தாலேலோ.

50) கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே! அழேல்அழேல்தாலேலோ குடந்தைக்கிடந்தானே! தாலேலோ.

51) கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய்! தாலேலோ நாராயணா! அழேல்தாலேலோ.

52) மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
ஐயா! அழேல்அழேல்தாலேலோ அரங்கத்தணையானே! தாலேலோ.

53) வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2)

1 thought on “மூன்றாம் திருமொழி – மாணிக்கம் கட்டி”

Leave a Reply