தலம் : இடைமருதூர்
அருளியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
திருவிருக்குக்குறள்
சுவாமி : மகாலிங்கேசுவரர்;
அம்பாள் : பிருகச்சுந்தரகுஜாம்பிகை.
திருச்சிற்றம்பலம்
தோடொர் காதினன், பாடும் மறையினன்
காடு பேணிநின், றாடும் மருதனே. 1
கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. 2
எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே. 3
விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே. 4
பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே. 5
கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே. 6
பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே. 7
எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே. 8
இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே. 9
நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே. 10
கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே. 11
திருச்சிற்றம்பலம்